Published : 01 Jun 2023 09:30 PM
Last Updated : 01 Jun 2023 09:30 PM

உயர் கல்வியில் விளையாட்டுப் பிரிவு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கருத்து

சென்னை: தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு. எனவே, இதில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பலர் விளையாட்டை தங்களது வாழ்க்கையாகத் தேர்வு செய்து பள்ளியில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அத்தகைய மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.

தற்போது, மருத்துவ படிப்பில் 7 இடங்களும், மூன்றாண்டு சட்டப்படிப்பில் 6 இடங்களும், ஐந்தாண்டுகள் சட்டப்படிப்பில் 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடஒதுக்கீடு பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப விளையாட்டுப் பிரிவில் இடஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி. பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துக்குமார், "விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அரசு பதிலளித்துவிட்டது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "விளையாட்டு வீரர்களுக்கான உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x