Published : 01 Jun 2023 08:58 PM
Last Updated : 01 Jun 2023 08:58 PM

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024 தேர்தலில்...” - முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் கேஜ்ரிவால் நம்பிக்கை

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடன் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நான் ஏற்கெனவே சொன்னதுபோல, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிதான் இது. மத்திய அரசின் இந்த அவசர சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தி சென்றடையும். ஒருவேளை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது: "முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி, இன்று நானும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் குழுவினருடன் தமிழகம் வந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்களைச் சந்தித்தோம்.

கடந்த 8 ஆண்டுகளாக் நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வென்றது. கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு தீர்ப்பை டெல்லி மக்களுக்கு சாதகமாக வழங்கியிருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு டெல்லியில் உள்ளது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, அரசை நடத்துவதற்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது.

குடிமைப்பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாமல்போனால், அரசை நடத்துவது அவ்வளவு எளிதானதல்ல என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உண்டு, அனைத்து அதிகாரங்களும் அந்த அரசுக்கு உண்டு என்று கூறியிருந்தது.

இந்த தீர்ப்பு வந்த ஒரு வாரத்துக்குள் மே 19ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நேரத்தில் பாஜக அரசு இரவு 10 மணிக்கு ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோல நடப்பது இதுவே முதல்முறை. தீர்ப்புக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருந்த அதிகாரங்களை ஆளுநருக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. இந்த அவசர சட்டம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ளது. பாஜகவுக்கு மக்களவையில் போதுமான அளவு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 238 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 93 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

பாஜக அல்லாத கட்சியினர் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்தால், மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை தோற்கடிக்க முடியும். எனவே, இதற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வரை சந்தித்தேன். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் மாநிலங்களவையில் கொண்டுவரும்போது டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. டெல்லி மாநில மக்களின் திமுக அரசு தோள் கொடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் சென்று பாஜக தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறேன். அதற்கு அனைவரிடம் இருந்து எங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கிடைத்து வருகிறது. இது ஒவ்வொரு நாளும் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிதான் இது. மத்திய அரசின் இந்த அவசர சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தி சென்றடையும். ஒருவேளை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது" என்று அவர் கூறினார்.

அப்போது அவரிடம் ராகுல் காந்தியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி மற்றும் கார்கேவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை தோற்கடிக்க காங்கிரஸ் உதவும் என்று நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மத்திய அரசின் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

"டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும்: கேஜ்ரிவால் சந்திப்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் உறுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x