Last Updated : 11 May, 2023 06:01 AM

 

Published : 11 May 2023 06:01 AM
Last Updated : 11 May 2023 06:01 AM

நெல்லிவாசல் நாடு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 98% தேர்ச்சி பெற்று சிறப்பிடம்: உயர்கல்விக்கு வழிவகை செய்ய கோரிக்கை

ஜவ்வாதுமலை அடுத்த நெல்லிவாசல் நாடு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிவாசல் நாடு மற்றும் புதூர்நாடு மலை கிராமத்தில் தலா ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூர் மலையில் ஒரு அரசுப்பள்ளி என வனத்துறை கட்டுப்பாட்டில் 3 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், திருப்பத்தூர் மாவட்டம் நெல்லிவாசல் நாடு மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 98 சதவீதம் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

தேர்வு எழுதிய 52 பேரில் ஒரு மாணவி மட்டுமே தோல்வியடைந்துள்ளார். அதிலும், 60 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றாலும், உயர்கல்வி பெற அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மலைவாழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லிவாசல் நாடு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘எங்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வக வசதி இல்லாததால் மாணவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவுள்ள புதூர்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆய்வகத்தில் செய்முறை தேர்வினை எழுதினர்.

அரசுக்கு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது நெல்லிவாசல் நாடு பள்ளியி லேயே அறிவியல் ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் தேர்வில் 95 சதவீதமும், 2-வது பொதுத்தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மேல்நிலை கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் உயர்கல்வி பெற முடியாமல் உள்ளனர். எனவே, மலைவாழ் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படவும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மலைப்பகுதிலேயே கல்லூரி ஒன்றை அரசு தொடங்க வேண்டும்.

அல்லது மாணவர்கள் வசதிக்காக மலையில் இருந்து நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதிகளையாவது அரசு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்கள் மட்டுமின்றி ஆசிரியர் களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x