Published : 02 May 2023 06:27 PM
Last Updated : 02 May 2023 06:27 PM

1-க்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தோருக்கு 3 வாரத்தில் துணைத் தேர்வு: கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில், 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தேர்வு நடத்தக் கோரி, மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில், "ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்றம், 2018-ல் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது" என்று வாதிடப்பட்டது.

அப்போது கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் , "உயர் நீதிமன்ற உத்தரவு, குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேரவும் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காகவும் துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் சார்ந்தது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x