Published : 09 Jan 2023 06:23 AM
Last Updated : 09 Jan 2023 06:23 AM

75-ம் ஆண்டு ராணுவ தினத்தையொட்டி: தமிழகத்தில் 5 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு

சென்னை: ராணுவ தினத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு, வித்யாஞ்சலி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தென்மண்டல ராணுவம் சார்பில், வித்யாஞ்சலி திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவில் 75 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 75-ம் ஆண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு அந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், ராணுவ மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்கள், யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இந்த திட்டத்தில் தமிழகத்தில் சென்னையில் 3 அரசுப் பள்ளிகளும், நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் 2 அரசுப் பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வித்யாஞ்சலி திட்டம் இந்த ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், தரமானக் கல்வியை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

ராணுவ தினத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு, முதல்முறையாக டெல்லிக்கு வெளியே வரும் 15-ம் தேதி, பெங்களூருவில் ராணுவ தினக் கொண்டாட்டர் பேரணி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x