‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் நிலவுவதால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் கற்றல் மேம்பாட்டுக்காக பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைப்படம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் (2025-26) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டன. முதல்நாளே பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகம் உட்பட பல்வேறு பொருள்கள் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. அதேநேரம் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மேலும், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களில் ஒரு பகுதிதான் வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “1 முதல் 5-ம் வகுப்புகளில் பயிலும் குழந்தைகள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் 2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேக பயிற்சி கையேடுகள் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாடத்திட்டம் எளிய முறையில் இருப்பதால் குழந்தைகள் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டில் வழக்கமான பாடப்புத்தகங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி கையேடுகள் வழங்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது இன்னும் கையேடுகள் விநியோகம் செய்ய ஒரு மாத காலமாகும். எனவே, அதுவரை பாடநூல்களை கொண்டு பயிற்றுவிக்குமாறு கூறிவிட்டனர். ஆனால், ‘எண்ணும் எழுத்தும்’ அடிப்படையில்தான் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடத்தப்பட்டு மதிப்பீட்டு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, கால தாமதமின்றி புத்தகங்களை விரைந்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்,” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in