Last Updated : 09 Dec, 2023 04:51 PM

 

Published : 09 Dec 2023 04:51 PM
Last Updated : 09 Dec 2023 04:51 PM

பழங்குடியின குழுவினருக்கு உதவ அமெரிக்கா - இந்தியா சியாட்டில் குழுவுடன் கைகோக்கும் அண்ணாமலை பல்கலை.

அமெரிக்காவில் உள்ள இந்தியா சியாட்டில் குழு பங்களிப்பில் இறையூர் நறிக்குறவ இன பெண்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமகதிரேசன் இலவச கணினி வாங்கினார்.

அமெரிக்காவில் உள்ள ‘இந்தியா சியாட்டில்’ குழு உதவியுடன் பழங்குடியின மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வருகிறது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 5 ஆண்டுகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் சார் சுற்றுப்புற சமூக வளர்ச்சி (NEST – Neighbourhood Empowerment through Science & Technology) எனும் செயல்திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராமப்புற விவசாய மற்றும் மீனவ குடும்பங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பங்காற்றி வருகிறது. அதன்ஒரு பகுதியாக, பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களின் மேம் பாட்டை கருத்தில் கொண்டு 'டெஸ்ட்' ( Tribal Empowerment through Science & Technology) என்ற திட்டத்தின் மூலம், அமெரிக்காவில் உள்ள ‘இந்தியா சியாட்டில் டீம்’ (India Seattle Team), மற்றும் தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றுடன் இணைந்து கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள இந்தியா சியாட்டில் குழு பங்களிப்பில் இறையூர் நறிக்குறவ இன பெண்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமகதிரேசன் இலவச கணினி வாங்கினார்.தமிழகத்தில் படித்துவிட்டு அமெரிக்கா சென்று பணிபுரிபவர்களால் உருவாக்கப்பட்டது ‘இந்தியா சியாட்டில் டீம்’. இந்த அமைப்பு, தாங்கள் தங்கள் தாய்நாட்டுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக இந்தியா சியாட்டில் டீம், தேவராஜ் முத்துகுமாரசாமி என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து பழங்குடியினருக்கான நலப்பணிகளை தொடங்கியிருக்கிறது.

அதன்படி, பல்கலைக்கழகம் பழங்குடியினருக்காக அளிக்கும் திட்ட முன்மொழிவை பரிசீலித்து, அந்தத் திட்டத்துக்கான தொகையை இந்தக் குழு அமெரிக்காவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நடப்பு கல்வியாண்டில் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சில மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் இறையூர் ஆகிய இடங்களில் நரிக்குறவ பெண்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய இத்திட்டம் உதவி புரிந்திருக்கிறது.

இறையூரில் அமைந்துள்ள நரிக்குறவர் மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில் கணினி மற்றும் இதர அடிப்படை வசதிகளுக்காக சுமார் ரூ1. லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை என்னும் குக்கிராமத்தில் கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சிகள் மூலம் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மற்றும் பழங்குடியின மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று அண்ணாமலை பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பழங்குடியினர் நல இயக்குநகரத்தின் இயக்குநர், அண்ணாமலைப் பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் புவியரசன் மற்றும் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை உதவி பேராசிரியர், ஜெயபிரகாஷ் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அமெரிக்காவில் உள்ள இந்தியா சியாட்டில் குழுவுடன் இணைந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இச்செயல்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராமகதிரேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x