Published : 22 Jul 2023 04:58 AM
Last Updated : 22 Jul 2023 04:58 AM

பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - சிறப்பு பிரிவில் 261 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள்உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும். அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x