Published : 20 Jul 2023 06:58 PM
Last Updated : 20 Jul 2023 06:58 PM

STEM பள்ளித் திட்டம்: 56 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறது சென்னை மாநகராட்சி

முதல் கட்ட பயிற்சி முகாம்

சென்னை: STEM பள்ளித் திட்டத்தின் கீழ் 56 மாணவ, மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது. மேலும், சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த சிட்டிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக STEM பள்ளி என்ற பயிற்சி திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் மற்றும் உயர் கல்வியில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற இலக்கை வைத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

STEM என்பது, Science, Technology, Engineering, and Mathematics in Chennai School என்பது ஆகும். இந்தத் திட்டத்தில் 56 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை உண்டு, உறைவிட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் முதல் இலக்கு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வைப்படும். அடுத்த கட்டமாக பல்வேறு மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வியில் சேருவதுக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது. ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவில் சிட்டிஸ் நிதியில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது" என்று அவர்கள் கூறினார்.

இது தொடர்பாக மாணவர் மணிகண்டன் கூறுகையில், "தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர வேண்டும் என்பது தான் எனது இலக்கு. இதற்கான பயிற்சியும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிபெண் எடுப்பதற்கான சிறப்பு பயிற்சியும் இந்த முகாமில் அளிப்பதாக கூறி உள்ளார்கள்" என்றார்.

மாணவி சந்தியா கூறுகையில், "எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் இலக்கு. சென்னை மாநகராட்சி மாதிரி பள்ளியில் படிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்க போவதாக கூறி உள்ளார்கள். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்பது விருப்பம். தற்போது மாநகராட்சி சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x