Published : 18 Jul 2023 06:45 AM
Last Updated : 18 Jul 2023 06:45 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை பெறுவதில் அரசு பள்ளி மாணவர்கள் இடையே கடும் போட்டி

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைப் பெறுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள்தான் அதிக அளவில் இடங்களைப் பெற்று வருகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பு ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். நீட் தேர்வுக்குப் பின் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது.

இந்நிலையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்குப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து மூன்று இலக்கமாக மாறியுள்ளது. அதன்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில் 555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்தன. நடப்பாண்டில் 473 எம்பிபிஎஸ் இடங்கள், 133 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 606 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

அதேநேரம், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது அதிகரித்துள்ளதால் போட்டியும் அதிகமாகியுள்ளது.

கடந்த ஆண்டு வரை நீட் தேர்வில் 720-க்கு 300 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, 2021-ம் ஆண்டில் 184 பேரும், 2022-ம் ஆண்டில் 250 பேரும் 300 மதிப்பெண்களுக்கு மேல்எடுத்தனர்.

ஆனால், நடப்பாண்டில் விண்ணப்பித்த 2,993 பேரில் 1,170 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x