Published : 17 Jul 2023 05:45 AM
Last Updated : 17 Jul 2023 05:45 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்கும் என அமைச்சர் தகவல்

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று வெளியிட்டார். துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஆர்.முத்துச்செல்வன், கிண்டி கலைஞர் மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளஅரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கி, கடந்த 12-ம் தேதி நிறைவடைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

அரசு இடங்களுக்கு 26,806 பேர் விண்ணப்பித்தனர். பரிசீலனைக்கு பிறகு, தகுதியான 9,680 மாணவர்கள், 16,176 மாணவிகள் எனமொத்தம் 25,856 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394பேர் விண்ணப்பித்தனர். பரிசீலனைக்கு பிறகு, தகுதியான 4,752 மாணவர்கள், 8,427 மாணவிகள் என மொத்தம் 13,179 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 3,042பேர் விண்ணப்பித்தனர். பரிசீலனைக்கு பிறகு, 901 மாணவர்கள்,2,092 மாணவிகள் என 2,993 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5 சதவீதஉள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியல்களை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 6,326 எம்பிபிஎஸ் இடங்கள் 1,768 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 473 எம்பிபிஎஸ் இடங்கள், 133 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு.. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில் 555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்த நிலையில், இந்த ஆண்டில் 606 ஆகஅதிகரித்துள்ளது. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் இடங்கள், 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடத்தினால், இரு இடங்களிலும் மாணவர்கள் பிளாக் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், கால விரயம் ஏற்படும்.

இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, மத்திய அரசு 20-ம் தேதிகலந்தாய்வு தொடங்கினால், 5-6நாட்கள் இடைவெளிக்கு பிறகு, தமிழகத்தில் 25-ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும்.

ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும். சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடத்தப்படும்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுமருத்துவமனையாகவே செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஆர்.முத்துச்செல்வன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x