Last Updated : 13 Jul, 2023 03:54 PM

 

Published : 13 Jul 2023 03:54 PM
Last Updated : 13 Jul 2023 03:54 PM

100% தேர்ச்சி, இல்லாமல் போன இடைநிற்றல் - கோவை கண்ணார்பாளையம் அரசுப் பள்ளி சாதித்தது எப்படி?

கோவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகளும், ஊக்கமும், உற்சாகவும் ஒருசேர கிடைக்கும்போது, விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது கோவை கண்ணார்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியின் கீழ் வரும் இப்பள்ளியில், ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஞானசேகரன், பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு முதல்முறையாக அழைத்துச் சென்றார்.

கரோனா காரணமாக 2 ஆண்டுகள் அழைத்துச்செல்லவில்லை. மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர்கள், அவர்களது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த முயற்சியானது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடந்த 2019-ம் ஆண்டு இப்பள்ளியில் 273 மாணவர்கள் பயின்று வந்தநிலையில், தற்போது இந்த எண்ணிக்கையானது 400-ஆக அதிகரித்துள்ளது.

பெட்டதாபுரம், ஒன்னிபாளையம் பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் 8-ம்வகுப்புக்கு பிறகு வேறு பள்ளிகளில்சேர்ந்து வந்த மாணவர்கள், தற்போதுகண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு படையெடுக்கின்றனர். இதன்காரணமாக, கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் 69- ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 109-ஆக அதிகரித்துள்ளது. பள்ளியில் இருந்து மாணவர்கள் பாதியில் நிற்பதும் நின்று போய், கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த உற்சாகத்தை குறைக்காமல் நடப்பாண்டும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் ஞானசேகரன். கடந்த 8-ம் தேதி காலை கோவை விமான நிலையத்தில் இருந்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என 55 பேர் விமானத்தில் சென்னை சென்றனர். அங்கு சென்றடைந்தபிறகு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றனர்.

அங்கிருந்து சென்னையை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் பிர்லா கோளரங்கம், கிண்டியில் உள்ள பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலாவை முடித்துவிட்டு இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் அனைவரும் கோவை திரும்பினர்.

இது குறித்து ஞானசேகரன் கூறும்போது, “3 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்கிறேன். அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்துச் செல்வது சிரமம் என்பதாலும், யாரும் விடுபடக் கூடாது என்பதாலும் பேட்ச், பேட்ச் ஆக அழைத்துச் சென்று வருகிறேன்.

இதுவரை 6 பேட்ச் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வரும் 15-ம் தேதி நடப்பாண்டின் இரண்டாவது பேட்ச் மாணவர்கள், பெற்றோர் என 55 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவ்வாறு மாணவர்களை கல்வியாண்டின் தொடக்கத்தில் அழைத்துச் செல்வது அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.

அதன் விளைவு, பொதுத்தேர்வு முடிவிலும், மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது எனக்கு மன நிறைவளிக்கிறது. உணவு, ஸ்நாக்ஸ், விமானம், ரயில் பயண கட்டணம், சுற்றுலா செல்லும் இடங்களில் நுழைவுக் கட்டணம் என அழைத்துச் செல்லும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6,500 வரை செலவாகும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x