Last Updated : 12 Jul, 2023 06:34 PM

 

Published : 12 Jul 2023 06:34 PM
Last Updated : 12 Jul 2023 06:34 PM

சாதிச்சான்று வழங்குவதில் இழுத்தடிப்பு: கடலூரில் மலைவாழ் குறவர் இன மாணவர்கள் தவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளில் உள்ள விளத்தூர், அழிஞ்சமங்கலம், குமராட்சி, சித்தமல்லி, மெய்யாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பழங்குடியின மலைவாழ் குறவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மூங்கிலால் கூடை பின்னுதல், முறம் செய்தல், கோழிக்கூடை செய்தல், கூலி வேலைக்குச் செல்லுதல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

பல்வேறு சமூக அமைப்புகளின் அழுத்தத்தால் இந்த மலைவாழ் குறவர் இனமக்களின் (எஸ்.டி) குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மலைவாழ் குறவர் இன மக்கள் சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர்களுடன் சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மலைவாழ் குறவர் இன மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு மீண்டும் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட சார்-ஆட்சியர் சுவேதா சுமன், “ரத்த சொந்தம் அதாவது தாத்தா, பாட்டி, அப்பா அம்மா, யாருக்காவது சாதிச் சான்றிதழ் இருக்கிறதா? இருந்தால் உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். அப்படி எதுவும் இல்லையென்றால் புதிதாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படாது” என்று கறாராக கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலை குறவர் இனமக்கள் கூறுகையில், “நாங்கள் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வாங்க அலைந்து வருகிறோம். தற்போது சார்-ஆட்சியரும் இதுபோல் கூறி அலைக்கழிக்கிறார். எங்கள் குழந்தைகள் படிக்க முடியவில்லை.

இது மிகவும் வேதனை அளிக்கிறது. நிற்கதியாக நடுத்தெருவில் நிற்பது போல உள்ளது. எங்களுக்கு கல்வியறிவு இல்லை. எங்களின் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று எண்ணி பள்ளியில் சேர்த்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது. நாங்கள் என்ன செய்வது?” என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் அலைக்கழிப்பதன் நோக்கம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாதிச்சான்று கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அக்குழந்தைகளின் பெற்றோர் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x