

திருநெல்வேலி: வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு பதிந்த 29 நாளில் இந்த தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் அன்சாரி (35). இவர், 11 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது குறித்து, அச்சிறுமியின் தாயார் நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின்கீழ் மார்ச் 12-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாங்குநேரி மகளிர் ஆய்வாளர் சுதா மற்றும் போலீஸார் வழக்கை விசாரித்து அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதன்தொடர்ச்சியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 நாட்களில் வழக்கின் அறிக்கை தயார் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி சுரேஷ்குமார் இவ்வழக்கை விசாரித்து, அன்சாரிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனையும் ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 29 நாட்களில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் இவ்வாண்டில் இதுவரை 7 போக்சோ வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி எஸ்பி வி.பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.