

சென்னை: சென்னை, வியாசர்பாடி, சுந்தரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கனிமொழி (29). இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். அதே கட்டிடத்தின் தரை தளத்தில், அவரது பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஏப்.4ம் தேதி கனிமொழி தனது கணவருடன் வெளியூர் சென்றிருந்தார். அன்று இரவு அவரது பெற்றோர் வீட்டைப் பூட்டி உறங்கச் சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 89 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு லேப் டாப் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து, கனிமொழி அளித்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித் (25) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்த போலீஸார். அவருடன் இருந்த சிறுவனையும் பிடித்தனர். கைதான அஜித்திடம் இருந்து 77 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு லேப் டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அஜித் ஒரு 'சரித்திர பதிவேடு' குற்றவாளி ஆவார். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா கடத்தல், வழிப்பறி மற்றும் திருட்டு என மொத்தம் 21 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அஜித் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பிடிபட்ட 16 வயது சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.