Last Updated : 16 May, 2023 06:50 PM

 

Published : 16 May 2023 06:50 PM
Last Updated : 16 May 2023 06:50 PM

காரைக்குடி அருகே வீட்டு வரிக்கு ரூ.13,000 லஞ்சம் வாங்கிய அதிமுக ஊராட்சித் தலைவர், ஓட்டுநர் கைது

கைதான ஊராட்சித் தலைவர் நாச்சியப்பன்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் வீட்டு வரிக்கு ரூ.13,000 லஞ்சம் வாங்கிய அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர், அவரது ஓட்டுநரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகேயுள்ள கீழகோட்டையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கல்லலில் தனது தந்தை பெயரில் இருந்த வீடு, இடம் உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு மாற்றினார். தொடர்ந்து தனது பெயருக்கு வீட்டு வரி ரசீது கேட்டு கல்லல் ஊராட்சித் தலைவர் நாச்சியப்பனை (55) அணுகினார். அதற்கு அவர் ரூ.13,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து பாலாஜி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி இன்று ரசாயன பவுடர் தடவிய ரூ.13,000-ஐ ஊராட்சி அலுவலகத்தில் இருந்த நாச்சியப்பனிடம் கொடுத்தார். ஆனால், அவர் அந்தப் பணத்தை தனது கார் ஓட்டுநர் சங்கரிடம் கொடுக்க கூறினார்.

இதையடுத்து சங்கரிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து நாச்சியப்பன், சங்கர் ஆகிய இருவரை கைது செய்தனர். ஊராட்சித் தலைவர் நாச்சியப்பன் கல்லல் அதிமுக நகரச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x