Published : 15 May 2023 05:40 AM
Last Updated : 15 May 2023 05:40 AM

திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 100 பவுன் நகைகள் திருட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகில் வசித்து வருபவர் பிரேம்குமார்(57). குழந்தைகள் நல மருத்துவர்.

இவரது மனைவி விஜிலா. இவரும் மருத்துவராக உள்ளார். இவர்களது மகள், சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக விஜிலா, மகளுடன் சென்னையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், பிரேம்குமார் தனது மருத்துவமனைக்கு விடுமுறை அளித்துவிட்டு, ஒரே வளாகத்தில் உள்ள தனது வீட்டையும், மருத்துவமனையையும் பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை சென்றார். நேற்று காலை பிரேம்குமார் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், திருத்துறைப்பூண்டி போலீஸாருக்கும், பிரேம்குமாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் ஒரு அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரேம்குமாரை போலீஸார் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த லாக்கரில் 100 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.

மேலும், மகளின் மருத்துவ படிப்பு செலவுக்காக திருவாரூரில் உள்ள 3 வீட்டு மனைகளை அண்மையில் விற்பனை செய்து, அதற்கான ரூ.40 லட்சம் பணத்தை மற்றொரு அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்ததாக பிரேம்குமார் கூறியுள்ளார். ஆனால், அந்த லாக்கர் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதா என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.

மேலும் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பிரேம்குமார் நேற்று மாலை வந்தார். அவரிடம் போலீஸார் புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். திருவாரூர் பொறுப்பு எஸ்.பி. ஜவகர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x