Published : 12 May 2023 08:31 PM
Last Updated : 12 May 2023 08:31 PM

திருவாரூர் | வெளிநாட்டுக்கு கடத்த இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

திருவாரூர் அருகே, அம்மையப்பன் என்ற இடத்தில், திருச்சி மண்டல வன பாதுகாவல் அலுவலர் சதீஷ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி தலைமையில் அம்மையப்பன் பகுதியில் வாகன சோதனையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் நான்கு பேர், சந்தேகிக்கும் வகையில் வந்துள்ளனர். அவர்களை மறைத்தபோது ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ஐந்தரை கிலோ திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பிடித்து விசாரித்ததில், திருச்சியை சேர்ந்த சுரேஷ், நாகப்பட்டினம் வேல்முருகன், திருவாரூர் பாலசுப்பிரமணியன் என்பதும், வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக திமிங்கலத்தின் எச்சத்தை எடுத்துக்கொண்டு திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

திமிங்கலத்தின் எச்சமானது வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதனால்,சர்வதேச அளவில் இதன் மதிப்பு ரூ. 6 கோடி ஆகும். இதனால் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது இதனை கடத்தி வந்த மூன்று பேர் பிடிபட்ட நிலையில், தப்பி ஓடிய மற்றொரு நபரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து பிடிபட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x