Published : 08 May 2023 06:01 AM
Last Updated : 08 May 2023 06:01 AM

நீட் தேர்வு பயத்தால் புதுச்சேரியில் மாணவர் தற்கொலை

புதுச்சேரி: நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சே ரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். புதுச்சேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பிசியோ தெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரியதர்ஷினி (23) என்ற மகளும், ஹேமச்சந்திரன் (20) என்ற மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகள் பிரியதர்ஷினி தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல், மகன் ஹேமச்சந்திரனையும் மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் பரிமளம் இருந்து வந்துள்ளார்.

ஹேமச்சந்திரன் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நீட் தேர்வுக்கு ஆர்வமாக படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஹேமச்சந்திரன் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரிமளம் உருளை யன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், "ஹேமச்சந்திரன் 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராக இருந்தார். நீட் தேர்வுக்காக இரவு படித்து வந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அறையின் ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்கில் தொங்கினார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மகன் ஹேமச்சந்திரன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்" என அதில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x