Published : 08 Apr 2023 06:10 AM
Last Updated : 08 Apr 2023 06:10 AM

குமரி பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் புகார் - 6 பிரிவுகளில் வழக்கு

நாகர்கோவில்: குமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29). இவர் அழகியமண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் ஆலயத்துக்கு வரும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் பழகி அவர்களுடன் ஆபாசமாக எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஆதாரங்கள், சாட்சியங்களை சைபர் கிரைம் போலீஸார் திரட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கெனவே பாதிரியாரை ஒரு நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். இவ்வழக்கு தொடர்பாக பல பெண்கள் பாதிரியார் மீது குற்றச்சாட்டு கூறியபோதும், முறையாக புகார் அளிக்க தயக்கம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.

அதில் பாதிரியார் செல்போனில் சேட்டிங் செய்தவாறு தவறான தகவல்களை பகிர்ந்ததாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் தொடர்பை துண்டித்த நிலையில், தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த புகாரின் மீது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீஸார் 6 பிரிவகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x