Published : 16 Mar 2023 09:18 AM
Last Updated : 16 Mar 2023 09:18 AM

கூகுள் பே மூலம் லஞ்சம்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்கு

நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன்

நாமக்கல்: சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்ற, நர்சுகளை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இங்கு துணை இயக்குநராக பிரபாகரன் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்திமுருகன் என்பவரும் இந்த அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

இடமாறுதல் உத்தரவு: மாநில அளவிலான கலந்தாய்வின் அடிப்படையில் கடந்த 26.7.2021 முதல் 30.7.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் புணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த நர்சுகள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இடமாறுதலுக்கு உத்தரவு பெற்ற நர்சுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள், தாமதம் செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம்: இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த நர்சுகளை, தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை ஒவ்வொருவரிடமும் லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காத நர்சுகளை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். லஞ்சம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து சில நர்சுகள் பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்றுச் சென்றுள்ளனர்.

கூகுள்பே மூலம் பணம் பெற்றனர்: இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு நர்சு, தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்றதும், அவரை இந்த பணியிலிருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர் என்பதும் தெரிய வந்ததுள்ளது.

முதலில் முன்பணமாக ரூ.10 ஆயிரமும், பின்னர் ரூ.25 ஆயிரமும் கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர். இதேபோல் எலச்சிபாளையம், வினை தீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளிடமும் கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்றுள்ளனர். சிலரிடம் பணமாகவும் வாங்கி உள்ளனர். மேலும் துணை இயக்குநரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துணை இயக்குநர் மீது வழக்கு: இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகிய 3 பேர் மீதும், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது விரைவில் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x