Published : 12 Mar 2023 04:20 AM
Last Updated : 12 Mar 2023 04:20 AM

சேலத்தில் லேத்பட்டறை உரிமையாளர் தற்கொலை: கந்து வட்டி கொடுமை வழக்கில் பெண் உட்பட இருவர் கைது

சேலம்: சேலத்தில் லேத்பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கந்து வட்டி கொடுமை வழக்குப் பதிவு செய்த போலீஸார் பெண் உட்பட இருவரை கைது செய்தனர்.

சேலம் இரும்பாலை அருகே எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லேத்பட்டறை நடத்தி வந்த தங்கராஜ் தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட தங்கராஜ் கடந்த 8-ம் தேதி விஷம் சாப்பிட்டுள்ளார்.

அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் விஜயா அதே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தங்கராஜ் மகன் கோபி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில், தனது தந்தை தங்கராஜ், ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (46) மற்றும் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாவித்திரி என்கிற சித்ரா (45) ஆகியோரிடம் கடந்த 2018-ம் ஆண்டு தொழிலை அபிவிருத்தி செய்ய ரூ. 4 லட்சம் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய தொகைக்கு 2 மடங்குக்கு மேல் பணம் கட்டியும், மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி மேற்பார்வையில் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் கந்து வட்டி கொடுமையின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜா மற்றும் சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் விஜயா தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மற்றொரு மகன் ஹரிபாபு கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x