Published : 23 Feb 2023 06:12 AM
Last Updated : 23 Feb 2023 06:12 AM

ராமநாதபுரம் | சமூக வலைதளம் மூலம் பழகி பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.54 லட்சம், 15 பவுன் நகை மோசடி: 8 பேர் மீது வழக்கு 

ராமநாதபுரம்: சமூக வலைதளம் மூலம் பழகி பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.54 லட்சம், 15 பவுன், கார் ஆகியவற்றை வரதட்சணையாகப் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக ஈரோடு இளைஞர் உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த ஜோசப்ராஜ் மனைவி ஆரோக்கிய மேரி(60). இவரது மகள் ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜய் (29) என்பவரிடம் சமூக வலைதளம் மூலம் பல ஆண்டுகளாகப் பழகினார்.

2020-ம் ஆண்டு ஆரோக்கியமேரியின் மகளை திருமணம் முடிப்பதாகக் கூறிய விஜய், தனது பெற்றோர், உறவினர்களுடன் ஆரோக்கியமேரி வீட்டுக்கு வந்து ரூ.60 லட்சம், 100 பவுன் நகை வரதட்சணையாக கேட்டுள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்ட ஆரோக்கியமேரி 2020 ஏப்ரல் முதல் 2022 மே 31 வரை பல தவணைகளில் விஜய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் ரூ.44,60,997 பணமும், நேரில் ரூ.10 லட்சம் என ரூ.54,60,997 கொடுத்துள்ளார்.

மேலும், 15 பவுன் நகை கொடுத்ததோடு, ஆரோக்கிய மேரியின் காரை எடுத்துச் சென்ற விஜய், அந்த காரை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இது தொடர்பாக கேட்டபோது விஜய் உள்ளிட்ட அவரது குடும் பத்தினர் ஆரோக்கியமேரியை அவதூறாக பேசி திருமணத்தை பற்றி பேசினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரோக்கியமேரி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜய், அவரது தந்தை கோவிந்தராஜ், தாய் சாவித்திரி, சகோதரர் வருண், சகோதரி சங்கீதா, உறவினர்கள் வைத்தீஸ்வரன், ரவிக்குமார், பிரீத் இமானுவேல் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x