Published : 16 Feb 2023 04:31 PM
Last Updated : 16 Feb 2023 04:31 PM

தி.மலை ஏடிஎம் கொள்ளை: 3 இடங்களில் 10 பேரிடம் விசாரணை - வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அப்டேட்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன்.  | படம் - இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: "திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளை வழக்குகளில் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளின் பெயர் மற்றும் விவரங்களை விரைவில் வெளியிடுவோம்" என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற ரூ.73 லட்சம் கொள்ளை வழக்குகளில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் 2-வது முறையாக செய்தியாளர்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று(16-ம் தேதி) சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளையில் கிடைத்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர், குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படையினர், ஹரியானா மாநிலத்தில் திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

நான்கு ஏடிஎம் கொள்ளையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளது, அறிவியல் பூர்வமான ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளன. கோலாரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, கொள்ளை நடைபெற்ற பகுதிகளை கண்காணித்து, அதன்பிறகு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக கோளாறு பகுதியைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதேபோல், தப்பித்து சென்ற 6 பேரை குஜராத் மாநிலத்தில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் விமானம் மூலம் ஹரியானா சென்றவர்களில் 2 பேரை கண்டறிந்து, அவர்களை பிடித்து அம்மாநிலத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முழுமையாக முடியவில்லை.

விமானத்தில் பயணம்: ஹரியானா மாநில கொள்ளையர்கள் என்பதை மட்டும் முதற்கட்டமாக உறுதி செய்துள்ளோம். மறுக்க முடியாத ஆதாரங்கள் சிக்கி உள்ளன. விரைவில் விசாரணை முடிவுக்கு வரும். 3 இடங்களில் 10 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த கொள்ளை வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்ப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளத்தை கண்டுபிடித்துவிட்டோம். குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரைவாக வெளியிடுவோம். திருவண்ணாமலையில் இருந்து கோலார் சென்ற கொள்ளையர்கள், பின்னர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலமாக ஹரியானாவுக்கு சென்றுள்ளனர். பழைய குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ கிடைத்துள்ளது.

கோலாரில் உள்ளூர் தொடர்பு: ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்று விசாரணை நடத்தும்போது, சில இடையூறுகள் இருக்கும். ஹரியானா மாநிலத்தில் மேவாத் பகுதியானது பிரச்சினைக்குரியது. அந்த பகுதியில் விசாரணை நடத்தும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நாங்கள் விசாரணைக்கு செல்லும் மாநிலத்தின் காவல்துறையினர் பெரியளவில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். கொள்ளையர்களுக்கு தமிழகத்தில் எந்த விதமான தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. கோலாரில் உள்ளூர் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புள்ளது. பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. தேசியளவில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு, 2 பேரை தவிர்த்து மற்றவர்களை சொந்த ஊருக்கு தப்பித்து செல்வதற்கு முன்பாக பிடித்துள்ளோம். விசாரணையில் உள்ளவர்களின் விவரங்கள், மற்ற மாநில காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற மாநிலங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் தொடர்பு குறித்து தெரியவரும்.

கொள்ளையர்களின் கள ஆய்வு: பாதுகாப்பு குறைவாக உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை நடைபெறுவதற்கு 3 நிமிடத்துக்கு முன்பாக காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஏடிஎம் கொள்ளை சம்பவத்துக்கு முன்பாகவே, கொள்ளையர்கள் நேரிடையாக வந்து, கொள்ளையில் ஈடுபட உள்ள பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களும் கிடைத்துள்ளன” என்றார்.

அப்போது டிஐஜி முத்துசாமி, ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x