Published : 16 Feb 2023 04:03 AM
Last Updated : 16 Feb 2023 04:03 AM

கோவையில் நீதிமன்றம் அருகே ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவையில் நீதிமன்றம் அருகே, ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை கோவில் பாளையத்தைச் சேர்ந்தவர் கோகுல் (23). ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே சென்ற கோகுலை, மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரிக்கின்றனர்.

ரத்தின புரியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக கோகுல் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக காந்தி புரத்தைச் சேர்ந்த ஜோஷ்வா (23), ரத்தின புரியைச் சேர்ந்த எஸ்.கவுதம் (24), அருண்குமார் (21), சூர்யா (23), டேனியல் (27), கணபதியைச் சேர்ந்த எம்.கவுதம் (24), பீளமேட்டைச் சேர்ந்த பரணி சவுந்தர் (20) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜோஷ்வா, எஸ்.கவுதம் ஆகியோரை காலில் சுட்டு போலீஸார் பிடித்தனர். இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் கோவை ஜே.எம்.3-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை நடந்ததும் இவர்கள் தப்பிச் செல்ல இருசக்கர வாகனங்கள் கொடுத்து உதவிய நண்பர்களான ரத்தின புரியைச் சேர்ந்த விக்னேஷ், விவேக், கார்த்திக் ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஒருவர் சரண்: கோகுல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரான ஞானசேகரன்(22) நேற்று மாலை உதகை மத்திய காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து உதகை வந்த கோவை மாநகர தனிப்படை போலீஸாரிடம், ஞானசேகரனை உதகை போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஞானசேகரனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x