Published : 04 Feb 2023 06:41 AM
Last Updated : 04 Feb 2023 06:41 AM

கோயம்பேடு திரையரங்க வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் தொழிலாளி சடலம்: கொலையா என போலீஸ் விசாரணை

சென்னை: கோயம்பேடு ரோகிணி திரையரங்க வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணிதிரையரங்கம் உள்ளது. இதன் வளாகத்தில் தரைத் தள தண்ணீர்தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப, குடிநீர் லாரி ஓட்டுநர் ராமலிங்கம் என்பவர் நேற்று மதியம் 1 மணியளவில் அதன் மூடியைத் திறந்தார். அப்போது, தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அவர் உள்ளே எட்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில், சடலம் ஒன்று மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள்தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு நிகழ்விடம் விரைந்தனர். கோயம்பேடு தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடம் விரைந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் சடலமாக மிதந்த நபர் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்தது. இவர், அந்த திரையரங்கில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 26-ம் தேதி வேலைக்கு வந்தவர் அதன் பிறகு வேலைக்கு வரவில்லை எனத்தெரியவந்தது.

மேலும், உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் அணிந்திருந்த உடையை வைத்து இறந்தது வெங்கடேச பெருமாள் என போலீஸார் கண்டறிந்தனர். அவருக்குத் திருமணமாகவில்லை.

குடிப்பழக்கம் உடைய இவர், வேலை செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா மின்சாரம் தாக்கி உள்ளே விழுந்துஇறந்தாரா கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x