Published : 24 Dec 2022 06:20 AM
Last Updated : 24 Dec 2022 06:20 AM

தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்: வருமான வரித் துறை ஊழியர் கைது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ரெக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன் (36) என்பவர் மூத்த வரி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த,கணவனை இழந்த 34 வயதுடைய பெண் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ரெக்ஸ், தூய்மைப் பணியாளர் பெண்ணிடம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி ரெக்ஸ், தனது அறையில் கொட்டியுள்ள தண்ணீரை சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்தாராம்.

அங்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம்திடீரென அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்துவெளியே ஓடியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாமென அப்பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டதால், அவர் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ரெக்ஸ் அப்பெண்ணுக்கு போன் மூலம் மீண்டும்தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன வேதனைஅடைந்த அப்பெண், வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2 தினங்களுக்கு முன் வீடு திரும்பினார், பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தார்.

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி ரெக்ஸ் மீது பெண் வன்கொடுமை சட்டம்உள்பட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x