Published : 07 Dec 2022 06:30 AM
Last Updated : 07 Dec 2022 06:30 AM

திருக்கழுகுன்றம் | செல்லியம்மன் கோயிலில் 20 பவுன் திருட்டு

திருக்கழுகுன்றம்: எடையூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான பிடாரி செல்லியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தாலி உட்பட 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே பொன்பதர்கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. எடையூர், வீரகுப்பம், பல்லவீரகுப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கிராம தேவதையாக இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் கோயில் அருகே சென்றபோது, கோயிலின் பூட்டை உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. தகவல் அறிந்த கிராம மக்கள் கோயிலுக்குள் சென்று பார்த்தப்போது, அம்மன் கழுத்திலிருந்த தாலி, பீரோ கதவு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது.

மேலும், அருகே திருப்பணிகள் நடைபெற்று வரும் பெருமாள் கோயிலிலும் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திருப்பணிகள் காரணமாக கோயிலில் இருந்த பழமையான சிலைகள் ஏற்கெனவே வேறு இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவை தப்பின.

இதுதொடர்பாக, கிராம மக்கள் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருக்கழுகுன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x