Last Updated : 01 Dec, 2022 02:20 PM

 

Published : 01 Dec 2022 02:20 PM
Last Updated : 01 Dec 2022 02:20 PM

திட்டக்குடி அருகே தாய், மகள், பேத்தியின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்பு: போலீஸ் விசாரணை

கடலூர்: திட்டக்குடியை அடுத்த மங்களூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் தாய், மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன்(42) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார். இவரது மனைவி சுமதி தனது மகள்களுடன் மலையனூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், தனது முதல் மனைவியான சுமதி கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இதனால் 4 வருடங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய சிவகுருநாதன், சில மாதங்கள் கழித்து சென்னையில் மருந்து கடையில் வேலைபார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மிஸ்பா சாந்தி (35) என்பவருடன் உறவு ஏற்பட்டு, அவருடன் நெருங்கிப் பழகியதில் ஹெலன் கிரேஸ் (8) என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அவர்களுடன் வசித்து வந்துள்ளார் சிவகுருநாதன். பின்னர் தனது மகள்கள் நிலைக் கருதி தான் மட்டும் சொந்த ஊர் திரும்பிய சிவகுருநாதன், தனது மகள்களுடன் வசித்துவந்துள்ளார்.

இதனிடையே, கடந்த டிசம்பரம் 27-ம் தேதி மிஸ்பா சாந்தி, அவரது மகள் ஹெலன் கிரேஸ் (8), மற்றும் மிஸ்பா சாந்தியின் தாய் டெபோரல் கல்யாணி (60) ஆகியோர் மலையனூர் சென்று சிவகுருநாதனை சந்தித்ததாகக் கூறப்பட்ட நிலையில், 3 பேரும் பெருமாள் கோயில் அருகிலுள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸார், வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிவகுருநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x