Published : 29 Nov 2022 07:21 AM
Last Updated : 29 Nov 2022 07:21 AM

குடந்தை அருகே பெற்றோர் கொலை: மகனை கைது செய்து போலீஸார் விசாரணை 

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பெற்றோரை கொன்று உடல்களுடன் வசித்த மனநலம் பாதித்த மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள தில்லையம்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ்(80). இவரது மனைவி லட்சுமி(73). இவர்களது மகன்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மகள் கீதா. இதில், மின்வாரியத்தில் பணியாற்றி வந்த மூத்த மகன் ரவிச்சந்திரனும், திருமணமான மகள் கீதாவும் இறந்துவிட்டனர். ரவிச்சந்திரனின் மனைவி சேலத்தில் மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

இளையமகன் ராஜேந்திரன்(46) பெற்றோருடன் வசித்து வந்தார். பட்டதாரியான ராஜேந்திரன், தனக்கு உரிய வேலை கிடைக்க வில்லை, திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். மேலும், இவர் அவ்வப்போது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கோவிந்தராஜ், லட்சுமி இருவரும் வீட்டை விட்டு வெளியேவராமல் இருந்ததுடன், அவர் களது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் பட்டீஸ்வரம் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது கோவிந்தராஜ், லட்சுமி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அங்கு அவரது மனநலம் பாதித்த மகன் ராஜேந்திரனும் இருந்துள்ளார். விசாரணையில், இரு நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் அரிவாளால் பெற்றோரை தலையில் வெட்டிக் கொன்று விட்டு, ஏதும் நடக்காததுபோல, வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோவிந்தராஜ், லட்சுமி ஆகியோரது உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இதுகுறித்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, மனநலம் பாதித்த ராஜேந்திரனை கைது செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x