Last Updated : 11 Nov, 2022 03:52 PM

 

Published : 11 Nov 2022 03:52 PM
Last Updated : 11 Nov 2022 03:52 PM

தென்காசி | பால் வியாபாரிகள் இருவர் படுகொலை: உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பால் வியாபாரிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் ஆனந்த் (26). இதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சூரியராஜ் (17). உறவினர்களான இவர்கள் இருவரும் பால் வியாபாரிகள். இவர்கள் இருவரும் வழக்கமாக தினமும் இரவில் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பலபத்திர ராமபுரம், கங்கனா கிணறு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பால் எடுத்துவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று இரவு பால் எடுக்கச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் இவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும், ஊத்துமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பலபத்திர ராமபுரம் அருகே உள்ள தோட்டத்துக்கு செல்லும் வழியில் ஆனந்த், சூரியராஜ் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. சிறிது தூரத்தில் பால் கேன்கள் மற்றும் ஆனந்தின் இருசக்கர வாகனம் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொலையாளிகளை கைது செய்யக் கோரி இருவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நொச்சிகுளம்- ஊத்துமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனிடையே, கொலை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x