Published : 07 Nov 2022 04:00 AM
Last Updated : 07 Nov 2022 04:00 AM

கோவை மாநகர காவல் துறையில் உளவு பிரிவுகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாநகர உளவுப் பிரிவுகளை பலப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, கோவை மாநகரில் மதம் சார்ந்த விவகாரங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகள், இயக்கங்களின் செயல்பாடுகள், சந்தேகத்துக்குரிய நபர்கள், தீவிரவாத ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகளின் மீதான கண்காணிப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தின.

மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகியவற்றின் மூலமும், தனிப் பிரிவுகளான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யு), கியூ பிரிவு, மத்திய அரசின் உளவுப் பிரிவு (ஐ.பி) போன்றவற்றின் மூலம் கண்காணிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு கண்காணிப்பு முறைகளையும் மீறி, கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவு இயக்கத்தை சேர்ந்தவர், 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரது செயல்பாடுகளை உளவுத்துறையினர் சரிவர கண்காணிக்கவில்லை என்பது தெரியவந்தது. கார் வெடி விபத்துக்கு உளவுத்துறையினரின் அஜாக்கிரதையும் ஒரு காரணம் என பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட சூழலில், உளவுத்துறையை பலப்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

‘‘பதற்றம் நிறைந்த மாநகரமான கோவையில் மதம் சார்ந்த விவகாரங்களை கண்காணிப்பதில் எஸ்.ஐ.சி, எஸ்.ஐ.யூ பங்களிப்பு முக்கியமானது. மைக்ரோ லெவலில் இறங்கி இவர்கள் கண்காணித்திருக்க வேண்டும். ஐ.எஸ் பிரிவில் இருந்த அனுபவம் வாய்ந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் 5 ஆண்டுகளை கடந்து விட்டனர் என்ற காரணத்தால் சில மாதங்களுக்கு முன்னர் ஒரேயடியாக மாற்றப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தகவலாளியை உறுதிப்படுத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

அதேபோல, மத விவகாரங்களை கண்காணிக்கும் எஸ்.ஐ.சி பிரிவிலும் ஒன்றரை மாதங்களாக உதவி ஆணையர் பணியிடம் காலியாக இருந்தது. அங்கு 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 8 காவலர்கள் மட்டுமே உள்ளனர். 15 காவல் நிலையங்களை கண்காணிக்க இந்த எண்ணிக்கை போதிய அளவில் இல்லை. அதேபோல், கோவையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு டிஎஸ்பி மேற்பார்வையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை கண்காணிக்கும் எஸ்.ஐ.யூ பிரிவில் மாநகருக்கு மொத்தம் 7காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுவும் போதுமான எண்ணிக்கையில்லை’’ என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து எஸ்.ஐ.சி பிரிவு பலப்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு ஐ.எஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சிலர் எஸ்.ஐ.சி. பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.சி பிரிவில் கண்காணிப்பு முறைகளும் மாற்றப்பட்டுள்ளன. ஐ.எஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சுகுமார் எஸ்.ஐ.சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தவிர, எஸ்.ஐ.சி பிரிவுக்கு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 2 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், எஸ்.ஐ.யூ பிரிவுக்கும், ஒரு காவல் நிலையத்துக்கு 2 பேர் நியமிக்க வலியுறுத்தி அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையிலும் எஸ்.ஐ.சி பிரிவு உள்ளது. மொத்தம் 7 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x