Published : 23 Aug 2022 07:21 AM
Last Updated : 23 Aug 2022 07:21 AM

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல் - தூத்துக்குடி அருகே 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே க்யூ பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட அத்தியாவசிய மருந்து, மாத்திரை பண்டல்களுடன், கைது செய்யப்பட்டோர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் தூத்துக்குடி அருகே நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 கார்களை மறித்து சோதனை நடத்தியதில், அவற்றில் முறையான ஆவணங்களின்றி, அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிலிருந்த மருந்து, மாத்திரைகள், மற்றும் புதிய செல்போன் ஆகியவற்றையும், இரு கார்களையும் பறிமுதல் செய்தபோலீஸார், கார்களில் வந்த ஆறுமுகநேரி ஜெயபாரத ராஜா (36), அவரது தம்பி ஜெயபாரத சாரதி (34) மற்றும் சங்கரலிங்கம் (40) ஆகியோரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இவர்கள் மூவரும் சென்னையில் இருந்துமருந்து, மாத்திரைகளை வாங்கி வந்து, காயல்பட்டினம் கடற்கரை வழியாக, படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இலங்கையில் இந்த மருந்து, மாத்திரைகளின் மதிப்பு ரூ.32 லட்சம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x