Published : 30 Jul 2022 06:04 AM
Last Updated : 30 Jul 2022 06:04 AM

வேலூர் | மூன்றரை கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேர் கைது: காவல் துறையினர் நடவடிக்கை

வேலூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் தெற்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயமோகன், காந்தி, வெங்கடேசன்.

வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தியவர் மற்றும் அதை வாங்க வந்த இருவர் என 3 பேரை காவல் துறையினர் கைது செய்ததுடன், மூன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் கலால் பிரிவு ஆய்வாளர் பேபி மற்றும் கலால் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் சிவக் குமார், ரங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக கள்ளக் குறிச்சி நோக்கிச் சென்ற தமிழக அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், சந்தேகத்துக்கிடமாக பேருந்தில் பயணம் செய்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமோகன் (28) என்பது தெரியவந்தது.

அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், சுமார் மூன்றரை கிலோ அளவுக்கு கஞ்சா பார்சல் இருந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே 2 பேர் கஞ்சா பார்சலை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலை அடுத்து வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலை மையிலான காவலர்கள் கஞ்சா பார்சலை பெறுவதற்காக காத் திருந்த இரண்டு பேரை பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூர் பகுதியைச் சேர்ந்த காந்தி (26), வெங்கடேசன் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த நிலையில், கஞ்சா பார்சலுடன் ஜெயமோகனையும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் வசம் கலால் பிரிவு காவலர்கள் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x