Published : 20 Jun 2022 06:30 AM
Last Updated : 20 Jun 2022 06:30 AM

திருச்சி காவல் சரகத்தில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி காவல் சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி காவல் சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை. கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதைத் தடுக்க ஜூன் 16, 17-ம் தேதிகளில் காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 645 கிராம் குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவு செய்து 11.140 கிலோ, கரூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 82.078 கிலோ, பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 9.919 கிலோ, அரியலூர் மாவட்டத்தில் 25 வழக்குகள் பதிவு செய்து 45.754 கிலோ என திருச்சி காவல் சரகத்தில் மொத்தம் 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.05 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x