Published : 10 May 2022 07:24 AM
Last Updated : 10 May 2022 07:24 AM

மதம் மாறுகிறேன் என கெஞ்சியும் விடவில்லை - காதல் கணவர் கொலை குறித்து பெண் வாக்குமூலம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. இவரும் பக்கத்து கிராமம் கன்பூரை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் காதலித்தனர். இருவரும் கடந்த ஜனவரி 31-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

விசாகப்பட்டினத்தில் 2 மாதம் தலைமறைவாக இருந்த தம்பதியினர், 10 நாட்களுக்கு முன் ஹைதராபாத் வந்தனர். கடந்த 4-ம் தேதி சரூர்நகர் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்ற இந்த ஜோடியை, அஷ்ரினின் அண்ணன் சையத் மோபின் அகமது, அவரது நண்பர் மசூத் அகமது ஆகிய இருவரும் நாகராஜுவை அடித்துக் கொன்றனர். இதுதொடர்பாக சையது மோபின், மசூத் அகமது ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மொபைல் டிராக் மூலம் நாகராஜுவின் நடமாட்டத்தை அறிந்துவந்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனிடையே தனது கண் எதிரில் கணவர் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து அஷ்ரின் இன்னும் மீளவில்லை. “பலரின் காலை பிடித்து கெஞ்சியும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் செல்போனில் படம் எடுத்தனர்” என அவர் புகார் கூறினார்.

இந்நிலையில் போலீஸாரிடம் அஷ்ரின் அளித்துள்ள வாக்குமூலத்தில், “திருமணத்துக்குப் பிறகு எனக்காக மதம் மாறுவேன் என்று நாகராஜு பல முறை என்னிடம் கூறியுள்ளார். அவரை நடு ரோட்டில் தாக்கும் போது கூட எனது அண்ணனின் காலை பிடித்துக் கொண்டு, ‘நான் மதம் மாறிவிடுகிறேன், எங்களை வாழ விடு‘ என நாகராஜு கெஞ்சினார். ஆயினும் அவரை எனது அண்ணன் விடவில்லை. இந்தக் கொலையில் மேலும் 4 பேர் உள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். எனது அண்ணன் உட்பட கொலையாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும்” என்று ஆத்திரத்துடன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x