Published : 04 May 2022 06:08 AM
Last Updated : 04 May 2022 06:08 AM

ஆட்டோ தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

ராஜ்

சென்னை: சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்(45). மது போதைக்கு அடிமையான இவரை, ராயப்பேட்டை பகுதியில் உள்ள, தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர். இங்கு 3 மாதங்கள் சிகிச்சைப் பெற்ற ராஜ், பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், ராஜ் மீண்டும் மது அருந்தியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ் உறவினர்கள், மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ராஜ் வீட்டுக்கு வந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ராஜ் கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் மறுவாழ்வு மையத்தில் இருந்து, அவரது மனைவி கலாவுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு ராஜைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ராஜ்வின் உடலில், கட்டையால் தாக்கிய அடையாளங்கள் இருந்துள்ளன.

தனது கணவரை மறுவாழ்வு மைய ஊழியர்கள் அடித்துக் கொன்றிருக்கலாம் என்று அண்ணா சாலை காவல் நிலையத்தில் கலா புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர்கள் ஜெகன் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x