Published : 29 Apr 2022 06:22 AM
Last Updated : 29 Apr 2022 06:22 AM

கோவையில் தங்கியிருந்த ஆவடியைச் சேர்ந்த கதாசிரியர் கொலை

கோவை: கோவையில் தங்கியிருந்த ஆவடியைச் சேர்ந்த கதாசிரியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த நிமிலன் என்பவர், மதுக்கரை அறிவொளி நகரில் உள்ள, தனியார் கல்லூரியின் பின்புறம் விறகு வெட்டுவதற்காக நேற்று முன்தினம் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்த அவர் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். சடலமாக கிடந்த நபரின் தலையில் 3 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை மர்மநபர்கள் தலையில் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. சடலத்துக்கு அருகே செல்போன் கிடந்தது. அதை வைத்து உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.

அதில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள, நிரஞ்சன் நகரைச் சேர்ந்த செந்தில் சுபாஷ் (38) என்பது தெரியவந்தது. இவர், கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் தங்கியிருந்து நாடகம் மற்றும் விளம்பரப் படங்களுக்கு கதை எழுதிக் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ம்தேதி, நண்பரை பார்க்க வெளியே சென்று வருவதாக தன் சகோதரியிடம் கூறிவிட்டு செந்தில் சுபாஷ் வெளியே சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.செந்தில் சுபாஷ் எப்படி இங்கு வந்தார், அவரை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து மதுக்கரை போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x