Published : 21 Apr 2022 06:04 AM
Last Updated : 21 Apr 2022 06:04 AM

தருமபுரியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

தருமபுரி மதிகோன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீஸார் குண்டலப்பட்டி சர்வீஸ் சாலை பகுதியில் நேற்று முன் தினம் மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரைக் கண்டதும் திரும்பிச் செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். வாகனத்தை ஓட்டி வந்தவர் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (29) என்பதும், அவருடன் வந்தவர் காரிமங்கலம் அடுத்த ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த ஜோதி (30) என்பதும் ஜோதியிடம் இருந்த கைப்பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்ததும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அவர் களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸார் தடங்கம் மேம்பால பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அவர் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளியைச் சேர்ந்த அருண்ராஜ் (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x