Last Updated : 01 Mar, 2022 01:32 PM

 

Published : 01 Mar 2022 01:32 PM
Last Updated : 01 Mar 2022 01:32 PM

சேலத்தில் குற்றவியல் நடுவருக்கு கத்திக் குத்து: நீதிமன்ற ஊழியர் கைது

பிரதிநிதித்துவப் படம்.

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்ற நடுவரை கத்தியால் குத்திய ஊழியரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டி பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல நீதிமன்றத்திற்கு வந்த பொன் பாண்டியிடம் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் நேராகச் சென்று தன்னை பணி மாறுதல் செய்து குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொன்பாண்டிக்கும், அலுவலக உதவியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பொன் பாண்டியை குத்த முயன்றுள்ளார். அப்போது அவர் தடுத்ததால் மார்பில் மட்டும் சிறிய கீறல் விழுந்து உள்ளது.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பிரகாஷைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அஸ்தம்பட்டி போலீஸார் உடனடியாக பொன்பாண்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது நீதிமன்ற நடுவர் பொன்பாண்டி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அலுவலக உதவியாளர் பிரகாஷ் ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த அலுவலக உதவியாளர், நீதிமன்ற நடுவரை விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x