

விழுப்புரத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில், கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் புறவழிச்சாலையில், அதாவது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 'வேதா கெஸ்ட் ஹவுஸ்' என்ற இடத்தில் இன்று (பிப்.13) அதிகாலை 4 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்று சாலையில் தடுப்புக் கட்டையின் மீது மோதியது. இதனால், இதன் பின் தொடர்ந்து வந்த காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதி முன்பகுதி சேதம் அடைந்தது.
தடுப்புகள் மீது ஏறிச்சென்ற ஈச்சர் லாரி, எதிர்திசையில் உள்ள சாலைக்குச் சென்று சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்ற மற்றொரு ஈச்சர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த வாகனங்கள் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னையில் இருந்து திருச்சி சென்ற 15 டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் 4 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினர் கேஸ் டேங்கர் லாரி மீது நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற மீட்புப் பணியால் டேங்கர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது 4 மணி நேரத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயல்பாக செல்கின்றன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.
தவறவிடாதீர்!