

அஜய், மகேஸ்வரன்
கல்பாக்கம்: மாமல்லபுரம் அருகே சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் 2 பேர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி 7-ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், தினமும் அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதிக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 22-ம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட 2 இளைஞர்கள், அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
சிறுமியின் வாயில் துணியை திணித்து, அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத கட்டிடத்துக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சிறுமி முழு பலத்துடன் போராடியுள்ளார்.
இதையடுத்து, இளைஞர்கள் இருவரும் அருகே கிடந்த கட்டையால் மாணவியின் தலையில் பலமாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினர். இதற்கிடையே, நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் அவரைத் தேடினர்.
அருகே உள்ள கட்டிடத்துக்குச் சென்று பார்த்தபோது, ரத்த காயங்களுடன் மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் துன்பறுத்தியது தொடர்பாக கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20), அவரது நண்பர் காரைத்திட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மகேஸ்வரன், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும், அஜய், மரக்காணம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.