Published : 27 Apr 2024 06:07 AM
Last Updated : 27 Apr 2024 06:07 AM

சென்னை | பாஜக மாவட்டச் செயலாளரை மிரட்டிய நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தேர்தல் ‘பூத்’ செலவுக்கு பணம் தராததால் பாஜக மாவட்ட பொதுச் செயலாளருக்கு மிரட்டல் விடுத்த அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். பாஜக மண்டல் தலைவர். கடந்த 20-ம் தேதி பாஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம்(50) மற்றும் நிர்வாகிகள் சிலர், ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து தேர்தல் செயல்பாடு குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த பாஜக நிர்வாகிகள் டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட 8 பேர், தென்சென்னை பூத் ஏஜென்டாக வேலை பார்த்ததற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை? எனக் கூறி முத்துமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முத்துமாணிக்கத்தை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் முத்துமாணிக்கம் புகார் அளித்தார். அதன்பேரில், பாஜக நிர்வாகிகள் 8 பேர் மீதும், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், சட்டவிரோதமாகக் கூடுதல், ஆபாசமாகப் பேசுதல், பொருட்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் மீது அக்கட்சியைச் சேர்ந்தவரே போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x