Published : 17 Apr 2024 06:02 AM
Last Updated : 17 Apr 2024 06:02 AM

பரோலில் வந்தபோது தப்பியோடிய கைதி விசாகப்பட்டினத்தில் பிடிபட்டார்

செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). இவர், கடந்த ஆண்டு கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரை அருகே உள்ள திருப்பாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம் சமீபத்தில் உயிரிழந்தார். ஆகவே, தந்தையின் 16-ம் நாள் காரியத்துக்கு பரோல் கேட்டு பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இதையடுத்து, 2 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது .

எனவே, கடந்த 1-ம் தேதி மதுரை சிறையிலிருந்து ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 6 போலீஸார் பாதுகாப்புடன், பரமேஸ்வரன் பாடியநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் 16-ம் நாள் காரியத்தின் போது, யாரும் கவனிக்காத நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

இதுகுறித்து பாதுகாப்புக்காக வந்த போலீஸார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் போலீஸார், தனிப்படை அமைத்து பரமேஸ்வரனை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி விசாகப்பட்டினத்தில் பதுங்கியிருந்த பரமேஸ்வரனை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x