Published : 09 Apr 2024 08:04 PM
Last Updated : 09 Apr 2024 08:04 PM

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவர் தம்பதியினர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கயத்தாறு அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.

கோவில்பட்டி: கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வள்ளியூரை சேர்ந்த மருத்துவ தம்பதியினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரன் (62). இவரது மனைவி ரமணி (59). இவரும் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்கள் இணைந்து வள்ளியூரில் மருத்துவமனை நடத்தி வந்தனர். இன்று காலை ரவீந்திரன், தனது மனைவி ரமணி, தனது தாய் சேர்மத்தாய் (82) ஆகியோருடன் சிவகாசியில் உள்ள உறவினர்களை சந்திக்க காரில் சென்றார். பின்னர் மதியம் 3 பேரும் வள்ளியூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ரவீந்திரன் ஓட்டினார்.

கயத்தாறு சுங்கச்சாவடிக்கு முன்பு வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மணலில் கவிழ்ந்து உருண்டது. இதில், சம்பவ இடத்திலேயே ரவீந்திரன், ரமணி, சேர்மத்தாய் ஆகியே 3 பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து கயத்தாறு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இறந்த மருத்துவ தம்பதிகளின் மூத்த மகள் மருத்துவர் சுஷ்மா (32) திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஈஸ்வர் (25) மருத்துவ படிப்பு முடித்து பணி செய்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x