Published : 13 Mar 2024 07:06 AM
Last Updated : 13 Mar 2024 07:06 AM

குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல், 6 பேர் கைது

காந்தி நகர்: குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையில் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத்தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிநவீன கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குஜராத்தின் கடலோரப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த மர்மப் படகிலிருந்து இந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடலோர காவல்படை சோதனையில் இதுவரை ரூ.3,135 கோடி போதைப்பொருள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடல்பகுதியில் மர்மமாக திரிந்த படகை, வழிமறித்த கடலோரக் காவல்படையினர் அதிரடி சோதனையிட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த 11-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கடலோரக் காவல்படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26-ம் தேதி குஜராத்திலுள்ள அரபிக் கடல்எல்லையில் 3,300 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை போதை மருந்து தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x