Published : 12 Mar 2024 12:57 PM
Last Updated : 12 Mar 2024 12:57 PM

சத்தியமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் மூவர் பலி

கார் மீது கரும்பு லாரி மோதி விபத்து

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் திம்பம் சாலையில், கார் மீது கரும்பு லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் சாலை, திம்பம் வழியாகச் செல்கிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தச் சாலையில், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரி 27-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது, எதிரே வந்த கார் மீது, கரும்புகள் சரிந்ததோடு, லாரியும் கவிழ்ந்தது.

இதில், கரும்பு கட்டுகள் கார் மீது விழுந்து மூடியது. காரில் பயணித்த 6 பேரும் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கினர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்த குமார் (60), கஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த செல்வம் (50), இண்டியம்பாளையத்தைச் சேர்ந்த சின்னையன் (55) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சவுந்தர்ராஜ் (60), செல்வம் (63), மனோகர் (59) ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக திம்பம் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x