Last Updated : 17 Feb, 2024 07:57 PM

1  

Published : 17 Feb 2024 07:57 PM
Last Updated : 17 Feb 2024 07:57 PM

கோவையில் பிளஸ் 2 மாணவர் அரிவாளால் வெட்டிக் கொலை - போலீஸில் மாணவர் சரண்

கொல்லப்பட்ட மாணவர் பிரணவ்

கோவை: கோவையில் பட்டப்பகலில், பிளஸ் 2 மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிறுவர் ஒருவர், போலீஸாரிடம் சரணடைந்தார்.

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் பிரணவ் (17). இவர், சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், இன்று காலை தன் நண்பர்களுடன் இணைந்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் பெற முடிவு செய்தார். இதற்காக ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், அரிவாளால் பிரணவின் கழுத்து மற்றும் கை பகுதிகளில் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார். இதில் படுகாயமடைந்த பிரணவ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிகிச்சைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். கொலை வழக்குப்பதிந்து இக்கொலையில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரித்தனர். இதற்கிடையே, பிரணவை கொலை செய்ததாக சிறுவர் ஒருவர் சூலூர் போலீஸாரிடம் சரணடைந்தார்.

சூலூர் போலீஸார் அந்நபரை சிங்காநல்லூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிங்காநல்லூர் போலீஸார் அந்தச் சிறுவனிடம் விசாரித்தனர். அதில் சரணடைந்த நபர், 18 வயதுக்கு உட்பட்டவர் என்றும், சிங்காநல்லூரைச் சேர்ந்த அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் விசாரித்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “உயிரிழந்த நபர் 2022-ம் ஆண்டு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துபோது, கைதான மாணவர் அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்பும், அவரது தங்கை 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். பள்ளியில் ஒருநாள் அவரது தங்கையை, உயிரிழந்த பிரணவ் மற்றும் அவரது நண்பர்களான 4 மாணவர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதை அம்மாணவி, தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

அவர் சென்று கேட்டபோது,பிரணவ் உள்ளிட்ட நால்வரும் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், 4 பேரையும் பழிவாங்க திட்டமிட்டு நேரம் பார்த்துள்ளார். கடந்தாண்டு எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில், தன்னை தாக்கிய நால்வரில் ஒரு மாணவரை, தற்போது கைதான சிறுவன் கத்தியால் குத்தியுள்ளார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் தப்பிவிட்டார். பின்னர், அவ்வழக்கில் கல்லூரி மாணவரான இந்த சிறார் கைதாகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த சில நாட்களாக பள்ளியில் நடந்த சம்பவத்தை நினைத்து கோபத்தில் இருந்த கைதான சிறுவன், பிரணவ் தனியாக வருவதை நோட்டமிட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x