

கிருஷ்ணகிரி: ரூ.2000 நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் என பர்கூர் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அமைந்துள்ளது. பர்கூர் நகருக்கு செல்லும் வழியில் மேம்பாலத்தையொட்டி பல இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பட்டு, தொடர்புக்கு செல்போன் எண்ணும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு சிலர் பேசினார். எதிர்முனையில் பேசியவர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தந்தால் தான், 3 ஐநூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தொடர்புடைய நபரிடம் பேசியபோது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் என்பதும், பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்யும் போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மொத்தம் 4 கிடைத்ததாகவும், அதனை சென்னை சென்று ரிசர்வ் வங்கியில் சென்று மாற்றி வந்ததாகவும், ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதை போல மாற்றலாம் என்கிற எண்ணத்தில் தான் சுவரொட்டி ஒட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், "போலீஸாரிடம் உங்களிடம் ஏதேனும் 2 ஆயிரம் ரூபாய் உள்ளதா, கொடுங்க மாற்றி தருகிறேன்" என கேட்டுள்ளார்.
இதுகுறித்து வங்கி அலுவலர்கள் கூறும்போது, "இது சட்டப்படி தவறு. அதுவும் துண்டு நோட்டீஸுகள் கொடுத்து, இவ்வாறு பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெறுவது குற்றமாகும். எனவே, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.