Published : 31 Dec 2023 04:16 AM
Last Updated : 31 Dec 2023 04:16 AM

துப்பாக்கியை துடைத்தபோது குண்டு பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு @ மதுரை

மதுரை: மதுரையில் துப்பாக்கியை துடைத்த போது கை தவறி சுட்டதில் குண்டு பாய்ந்து, முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் வீதியைச் சேர்ந்த ஜெயராம் என்பவரது மகன் ராஜேந்திர பிரபு (58). இவருக்கு மனைவி மணிமேகலை, மகன்கள் ஜெய பிரவீன், சுதர்சன் ஆகியோர் உள்ளனர். இவர் 23 ஆண்டுகள் ராணுவத் தில் பணியாற்றி விட்டு, கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது, ஐ.ஓ.பி வங்கியில் ஏடிஎம் மையங்களுக்கு வாகனத்தில் பணம் கொண்டு செல்லும் பிரிவில் பாது காவலராக இருந்தார்.

இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் அரசு அனுமதி பெற்று வைத்துள்ள துப்பாக்கியை துடைத்து சுத்தப்படுத்துவது வழக்கம். அதேபோல், நேற்று காலை தனது வீட்டு மாடியில் துப்பாக்கியை துடைத்த போது, கை தவறுதலாகப்பட்டு சுட்டதில் குண்டு பாய்ந்துள்ளது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மாடிக்கு ஓடிச் சென்றனர். அப்போது, ராஜேந்திர பிரபுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டதில் மயங்கி விழுந்து கிடந்தார்.

உடனடியாக அவரது குடும்பத்தினர், அவரை ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ராஜேந்திர பிரபு உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கரிமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை கைப் பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கியை சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்ததா? அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x